

திருச்சியில் ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து – 21 பேர் படுகாயம்
கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி 31 பேருடன் பயணித்த ஆம்னி பேருந்து இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே விபத்துக்குள்ளானது.
திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் சிக்கி உயிர் பீதியில் அலறினர். அருகிலிருந்த இளைஞர்கள் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் அங்கு சென்று, இளைஞர்களின் உதவியுடன் 31 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அதில் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.