

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சங்கம்பட்டி கிராமத்தில்
தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் (RAWE) ஒரு பகுதியாக, சங்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை
மருத்துவ முகாமை வெற்றிகரமாக நடத்தினர். இம்முகாம் அரசு கால்நடை மருத்துவர்களின் முன்னிலையிலும், வழிகாட்டுதலிலும் நடைபெற்றது.
முகாமின் முக்கிய அம்சங்களாக கால்நடைகளைத் தாக்கும் மிக முக்கியமான கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும்
பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குத் தேவையான தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய
சுகாதார முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும்
கால்நடைகளின் இனவிருத்தியை மேம்படுத்தவும், தரமான கன்றுகளைப் பெறவும் நவீன ‘செயற்கை முறை கருவூட்டல்’
தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தகுதியுள்ள மாடுகளுக்குச் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது.
பின்னர் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பைத் தடுக்க, ஆடுகள் மற்றும் மாடுகளுக்குக் குடற்புழு நீக்க
மருந்துகள் வழங்கப்பட்டன. தீவனத்தின் மூலம் பரவும் புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான தடுப்பூசிகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இச்சிறப்பு முகாமின் வாயிலாக அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். மாணவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைகளை அருகில் இருந்து கேட்டறிந்தனர்.
கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளும், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களின் களப்பணியும் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
