

ஜன.30.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமானதாக சொல்லப்படும் கல்குவாரி முறைகேடாக கனிம வள கொள்ளை நடைபெற்று வருவதாக வந்த தகவல் அடிப்படையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற, திருச்சியை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் திரு கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை குவாரியில் இருந்த குண்டர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் தாக்கயதோடு இருவரையும் கடத்தியதாகவும் கூறப்படுகிறது. இச் செய்தி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால் தகவல் அறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களின் உயிரை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுத்து செய்தியாளர்களை காவல்துறை குழு மூலம் உயிருடன் மீட்டனர். மேற்கண்ட இச்சம்பவத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கை சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் இருந்து பலத்த கண்டன குரல்கள் எழுந்தன.
செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு எப்பொழுதுமே கேள்விக்குறியான நிலையில் இருந்து வருவதாகவும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பத்திரிக்கையாளர்களை தாக்கிய குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
மேலும் தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு பத்திரிக்கையாளர்களின் உயிரை மீட்ட காவல்துறைக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
தாக்கப்பட்ட செய்தியாளர்கள் திருச்சி அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.